Published : 05 Jul 2021 03:14 AM
Last Updated : 05 Jul 2021 03:14 AM

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பரவலாக மழை :

தூத்துக்குடியில் குடைபிடித்தபடி மழையை ரசித்த சிறுவர்கள். படம்: என்.ராஜேஷ்

நெல்லை/தென்காசி/ தூத்துக்குடி

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. சில நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்நிலையில், கடந்த 20 நாட்களாக மழை யின்றி வறண்ட வானிலை காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். நேற்றும் காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மதியம் வெயிலின் தாக்கம் குறைந்தது. மாலையில் வானில் மேகம் திரண்டது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், மானூர், தச்சநல்லூர் பகுதிகளில் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் பரவலாக லேசான மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம்போல வெயில் அடித்தது. மதியத்துக்கு பின் வானிலை மாறத் தொடங்கியது. மாலை 3 மணியளவில் வானம் கருமேகங்களால் சூழப்பட்டு, தூத்துக்குடி பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது. பின்னர் 3.30 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரைமணி நேரம் பெய்த பலத்த மழையால், தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x