Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM

சேலம் மாவட்டத்தில் இரு நாட்களுக்கு பின்பு - தடுப்பூசி வந்ததால் மையங்களில் திரண்ட மக்கள் :

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்கள் தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில், நேற்று தடுப்பூசி வந்ததால், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அதிகாலை முதல் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்துக்கு கோவேக்சின் 2 ஆயிரத்து 880 டோஸ்களும், கோவிஷீல்டு 50 ஆயிரத்து 700 டோஸ்களும் வந்தன.

இதில், ஊரகப்பகுதிக்கு கோவேக்சின் தடுப்பூசி 2 ஆயிரத்து 880 டோஸ்களும் கோவிஷீல்டு 34 ஆயிரத்து 880 டோஸ்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. சேலம் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 20 ஆயிரத்து 500 டோஸ்களும் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 138 தடுப்பூசி மையங்களில் நேற்று பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில், சேலம் மாநகராட்சியில் 32 மையங்களும், ஊரகப் பகுதியில் 106 மையங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி மையங்களில் அதிகாலை முதல் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏமாற்றத்தை தவிர்க்க பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x