Published : 02 Jul 2021 03:14 AM
Last Updated : 02 Jul 2021 03:14 AM

கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால்களில் பாலம் கட்டும் பணிகளை அமைச்சர் ஆய்வு :

ஊஞ்சலூர் பகிர்மானக் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.

ஈரோடு

சென்னிமலை ஒன்றியத்தில் கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்களில் பாலம் கட்டும் பணியை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுண்டச்சிபாளையம், நசியனூர் கந்தாம்பாளையம், கருமாண்டம்பாளையம், சாணார்பாளையம், பனப்பாளையம், கொம்பனைபுதூர் ஆகிய பகுதிகளில் உள்ள கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்களில் பாலம் கட்டும் பணிகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட குப்பகவுண்டன்பாளையம் மற்றும் கனகபுரம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயின் குறுக்கே கீழ்பவானி வாய்க்காலில் விரிவாக்குதல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து, இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மைல் 55/2-ல் அமைந்துள்ள வடிகால் பாலம் மறு கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைந்து முடித்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

தொடர்ந்து, கருக்கன்காட்டுவலசு பகுதியில் மயானம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அதனை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட மயானத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி, அமைச்சர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

ஆய்வின்போது ஈரோடு எம்பி அ.கணேசமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சென்னிமலை ஒன்றியத்தலைவர் காயத்ரி இளங்கோ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எ.அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x