Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM
நெய்வேலி பகுதியில் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ர மணியம் ஆய்வு மேற்கொண்டார்.
நெய்வேலியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் ஆட்சியர் பலாக்கன்று நட்டார். பின்னர், கொய்யா பதியன் செய்து கன்றுகள் உற்பத்தி செய்வதையும், மா, முந்திரி ஒட்டுகட்டி உற்பத்தி செய்யும் முறைகளையும், மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறையையும், விதைப்பந்து, அழகு செடிகள், கோக்கோ விதைகள், தென்னங்கன்றுகள் ஆகியவை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வது குறித்தும், மிளகாய், கத்தரி, சாமந்தி உள்ளிட்டவைகள் குழித்தட்டு நாற்றங்கால் செய்யும் பணிகளையும், வெங்காய விதை உற்பத்தி, பயோகாரணிகள் உற்பத்தி செய்யும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நெய்வேலி வேகாக்கொல்லை பகுதியில் ரூ.7.5 லட்சம் மானியம் பெற்று சிறிய நாற்றங்காலில் பல்வேறு வகையான செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருவதையும், அரசடிக்குப்பம் பகுதியில் ரூ.10 லட்சம் மானியம் பெற்று அறுவடைக்கு பின் பலாப்பழங்களை பதப்படுத்தி பலாப்பொடி மற்றும் பலா சிப்ஸ் உற்பத்தி செய்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சுரேஷ்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT