Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM

பவானிசாகரில் நீர் இருப்பு திருப்திகரம் - கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 1-ல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை :

ஈரோடு

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நீர் திறக்க வேண்டுமென கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் நல்லசாமி கூறியதாவது:

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன நெல் சாகுபடிக்கு ஆகஸ்ட் 15—ம் தேதி நீர் திறப்பது வழக்கம். நடப்பு பாசன பருவத்தின் தொடக்கத்திலேயே, அணையின் முழு கொள்ளளவான 32.8 டிஎம்சியில், மூன்றில் இரண்டு பங்கு நீர் இருப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் மின் அணைகளும் நிரம்பிய நிலையில், பில்லூர் அணையில் இருந்து தினமும் ஒரு டிஎம்சி நீர் வரத்து உள்ளது. மழை தொடர்ந்தால் பவானிசாகர் அணை விரைவில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

எனவே, நீர் இருப்பையும், பாசனப்பகுதியில் நிலவும் வறட்சியையும் கருத்தில் கொண்டு, கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி நீர் திறக்க வேண்டும். இதற்காக, மராமத்துப் பணிகளை பொதுப்பணித்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்.

நீர் திறப்பு குறித்த அறிவிப்பை அரசு முன்கூட்டியே அறிவித்தால், விவசாயிகள் இடுபொருட்களை வாங்கவும், நிலத்தினைத் தயார் செய்யவும் ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 92.92 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 23.53 டிஎம்சியாகவும், அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 1059 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 200 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x