Published : 21 Jun 2021 03:15 AM
Last Updated : 21 Jun 2021 03:15 AM
மக்காச்சோளம், கம்பு, ராகி ஆகிய விளைபொருட்களை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, ஈரோடு ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மக்காச்சோளம், கம்பு, ராகி மற்றும் சோளம் ஆகிய விளை பொருட்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அந்தியூர், பூதப்பாடி, சத்தியமங்கலம், தாளவாடி, புன்செய் புளியம்பட்டி உள்ளிட்ட ஈரோடு விற்பனைக்குழுவின் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் இவற்றை விற்று வந்தனர். இதில், வணிகர் களும், கால்நடை தீவன உற்பத்தி நிறுவனங்களும் கலந்துகொண்டு மறைமுக ஏலம் மூலம் இவற்றை வாங்கியதால், நல்ல விலை கிடைத்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னர்,மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் ஆகிய விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கப் படவில்லை. இந்த விளை பொருட்களை விற்பனை பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், இவற்றை வாங்க வணிகர்கள் விற்பனைக்கூடத்திற்கு வருவ தில்லை. இதனால், ஆதார விலையை விட, குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் இவற்றை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கம்பு, ராகி, சோளம், மக்காச்சோளம் ஆகிய விளைபொருட்களை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து வியாபாரிகள், விவசாயிகளை அழைத்துப் பேசி முந்தைய காலம் போல் விற்பனை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT