Published : 14 Jun 2021 03:14 AM
Last Updated : 14 Jun 2021 03:14 AM

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆர்ப்பாட்டம் : நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்பு

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி தச்சநல்லூரில் பாஜகவினர் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்/ கோவில்பட்டி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி என்ஜிஓ காலனியில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தனது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில், அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் கலந்துகொண்டனர். திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்ட தலைவர் ராமராஜா தலைமையில் தலைவன் கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பாஜகவினர் டாஸ்மாக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளுக்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் பி.எம்.பால்ராஜ் டூவிபுரத்தில் உள்ள தனது வீட்டு முன்பாக குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் டூவிபுரத்தில் உள்ள வீட்டின் முன்பும், பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவராமன் திரவிய புரம் 6-வது தெருவில் உள்ள தனது வீட்டு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பாஜக நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அவரது வீட்டு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர பொதுச் செயலாளர்கள் முனிராஜ், சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல், இளைஞரணி வடக்கு மாவட்டத் தலைவர் காளிதாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது.

எட்டயபுரத்தில் மாவட்டச் செய லாளர் ஆத்திராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் தலைவர் ராம்கி, மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். நடைக்காவில் மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் வீட்டு முன்பு போராட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் சற்குண வீதியில் உள்ள தனது வீட்டு முன்பு எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ், வெள்ளடிச்சிவிளையில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் என, 600-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x