Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை - கருப்பு பூஞ்சையால் 20 பேர் பாதிப்பு :

திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் நவீன பெல் மிஸ்டர் கருவி மற்றும் நவீன டிராக்டர் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. திருநெல்வேலி மாநகரில் நேற்று முன்தினம் 1,120 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 14 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். டார்லிங் நகரில் ஒரே முகவரியில் 4 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொக்கிரகுளம் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட ஆய்வில் தளவாய்புரம் மற்றும் தாழையூத்தை சேர்ந்த தலா ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான மக்கள் வெளியில் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பது குறித்து சுகாதாரத்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். கரோனா தொற்று குறைந்து வருவதால் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான படுக்கைகள் காலியாகியுள்ளன.

சிகிச்சையில் 540 பேர்

அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கூறிய தாவது:

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சை அளிக்க 1,100 படுக்கை வசதிகள் ஏற் படுத்தப்பட்டன. இவற்றில் பெரும் பாலானவை ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டவை. தற்போது கரோனா பாதிப்பு, பாதிக்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், 650 படுக்கைகள் காலியாகவுள்ளன. மொத்தம் 540 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இதற்கு தேவையான மருந்துகள் உள்ளன.

பொது இடங்களுக்கு செல்வோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தடுப்பூசி தட்டுப்பாடு

இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. தடுப்பூசி போடும் மையங்கள் பலவும் மூடப்பட்டிருந்ததால், அங்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருநெல்வேலி மருத்துவமனை யில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் நவீன பெல் மிஸ்டர் கருவி மற்றும் நவீன டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x