Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை :

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தேவையின்றி சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளைப் பிடித்த போலீஸார் அவர்களை கரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தினர். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்

முழு ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறி சேலத்தில் தேவையின்றி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், கரோனா தொற்று பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பலர் தேவையின்றி சாலைகளில் சுற்றி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில், தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்வது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதவர்கள், முகக் கவசம் அணியாதவர்கள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாநகரில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் 3 ஆயிரத்து 978 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டப் பகுதிகளில் 6 ஆயிரத்து 439 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, சேலம் மாநகரில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களைப் பிடித்த போலீஸார், அவர்களை கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுகாதாரத் துறையினர் மூலம் கரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்த போலீஸார், ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தியதால், வெளியே சுற்றியவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x