Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

ஜுன் 12-க்குள் தூர் வாரும் பணி நிறைவடையும் : அரசின் கூடுதல் தலைமைச் செயலர் தகவல்

திருச்சி

மேட்டூர் அணை திறக்கப்படும் ஜூன் 12-ம் தேதிக்குள் தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துவிடும் என அரசின் கூடுதல் தலைமைச் செயலர்(பொதுப்பணித் துறை) சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

நீர்நிலைகளைத் தூர்வாரும் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் அரியாறு வடிநிலக் கோட்டத்தில் 43 பணிகள் 97.70 கி.மீ தொலைவுக்கு ரூ.3.85 கோடியிலும், திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்தில் 20 பணிகள் 65.11 கி.மீ தொலைவுக்கு ரூ.1.773 கோடியிலும் என மொத்தம் 63 பணிகள் மொத்தம் 162.81 கி.மீ தொலைவுக்கு ரூ.5.623 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில், அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (பொதுப்பணித் துறை) சந்தீப் சக்சேனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவெறும்பூர் வட்டம் நவல்பட்டில் காட்டாற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. எனவே, குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாக இருக்கலாம்.

மேட்டூர் அணையில் பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் உள்ளது. அணை திறக்கப்படுவதற்குள் தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துவிடும். இப்பணிகளில் குறைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்தினால், அவற்றின் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். முக்கொம்பு புதிய மேலணை கட்டுமானப் பணிகள் இன்னும் 4, 5 மாதங்களில் நிறைவடையும் என்றார்.

ஆய்வின்போது, நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, நடுக் காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.திருவேட்டைசெல்லம், அரியாறு வடிநில கோட்டச் செயற்பொறியாளர் பி.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, லால்குடி வட்டம் புள்ளம்பாடி கிராமத்தில் உள்ள பரவன் ஓடை தூர்வாரும் பணிகளை சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x