Published : 28 May 2021 06:42 AM
Last Updated : 28 May 2021 06:42 AM

சேலம் மாநகர காவலர்களுக்கு - நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 5 ஆயிரம் மாத்திரைகள் வழங்கல் :

சேலம்

காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடியதும் பலவகை ஊட்டச்சத்துக்கள் கொண்ட 5000 மாத்திரைகளை ‘பயோ மைக்ரான்’ நிறுவனத்தினர் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமாரிடம் வழங்கினர்.

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், ஊட்டச்சத்து மிக்க மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக காவல் துறையினர் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர்.

நோய் தொற்று ஏற்பட்டு ஒரு சில காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுக்கும் விதமாக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு காவலர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்நிலையில், காவலர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான மாத்திரைகளை ‘பயோ மைக்ரான்’ நிறுவனத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் வழங்கப்படுகிறது.

அதன்படி, சேலத்தில் பயோ மைக்ரான் நிறுவனத்தின் சார்பில் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமாரிடம் பயோ மைக்ரான் நிறுவனம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க 5000 மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஊட்டச்சத்து மாத்திரைகளை அனைத்து காவலர்களுக்கும் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் வழங்கினார்.

அதேபோல, சேலம் மாநகர காவலர் சமுதாய கூடத்தில் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதில் மாநகர காவல் துறையினர், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x