Published : 22 May 2021 03:13 AM
Last Updated : 22 May 2021 03:13 AM
சென்னிமலை 1010 நெசவாளர் காலனியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் பி.காசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சென்னிமலை 1010 நெசவாளர் காலனியில், நோய் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது. எனவே, இப்பகுதியில் புதிதாக கரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும், என்றார்.
தொடர்ந்து வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் 3000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1000 படுக்கைகளும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் வசதி தேவைப்படாத சிகிச்சைக்கும், வீடுகளில் தனிமைப்படுத்த வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் என 3000 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில், 950 மட்டுமே நிரம்பி உள்ளது, இந்த சிகிச்சை மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் விரைவில் சரி செய்யப்படும். சித்த மருத்துவமனை அமைப்பதற்கு ஒருவர் அனுமதி கோரியுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT