Published : 16 May 2021 03:17 AM
Last Updated : 16 May 2021 03:17 AM
திருநெல்வேலி/நாகர்கோவில்/தூத்துக்குடி
திருநெல்வேலி உள்லிட்ட தென் மாவட்டங்களில் கரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளதை அடுத்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால், கடந்த சில நாட்களாக இருந்த வாகனப் போக்குவரத்து வெகுவாக குறைந்தது.
தமிழகத்தில் கரோனா 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சாலை சந்திப்புகளிலும், மார்க்கெட் பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. காய்கறி, பலசரக்குகளை வாங்கச் செல்லும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள இடங்களிலேயே வாங்கி கொள்ள வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தினர். மார்க்கெட் பகுதிகளில் இதுகுறித்த அறிவிப்பை போலீஸாரும், சுகாதாரத்துறையினரும் ஒலிபெரு க்கி மூலம் அறிவித்தனர்.
டீக்கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி டவுனில் சைக்கிளில் கேன்களை கட்டிக் கொண்டு டீ விற்ற வர்களையும் போலீஸார் எச்சரித்து அனுப்பினர். திருநெல்வேலியில் டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, டக்கரம்மாள் புரம், சமாதானபுரம், கேடிசி நகர், ஜெபா கார்டன் போன்ற பகுதிகளில் சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காய்கறி, பலசரக்கு, இறைச்சி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கப்பட்டிருந்தன. நடைபாதைக் கடைகளும் காலை 10 மணிக்குமேல் அனுமதிக்கப்படவில்லை.
மருந்து கடைகள், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. 4 மணி நேரம் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்பட அனுமதி என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு காரணமாகவும் கடைகளில் நேற்று கூட்டம் இருந்தது.
கன்னியாகுமரி
முழு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து மளிகைக்டை, காய்கறிக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச் செல்லுமாறு பொதுமக்களிடம் போலீஸார் வலியுறுத்தினர்.அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவோருக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். கரோனா புதிய கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என எஸ்.பி. பத்ரிநாராயணன் நாகர்கோவில் பகுதியிலும், சோதனைச் சாவடிகள், பொது இடங் களிலும் ஆய்வு மேற்கொண்டார். காலை 10 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறுகிய நேரமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் பெரும்பாலான மளிகை, காய்கறிக் கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகரில் நேற்று காலை 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. நகரின் முக்கிய சந்திப்புகளான வி.வி.டி. சந்திப்பு, தென்பாகம் காவல் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, வ.உ.சி. மார்க்கெட் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து, போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம், தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என, போலீஸார் அறிவுறுத்தினர். ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை செய்தனர்.
கோவில்பட்டி
எட்டயபுரம் பஜாரில் உள்ள மளிகை, காய்கறி கடைகளில் 10 மணியைத் தாண்டியும் கூட்டம் இருந்தது. இதையடுத்து வட்டாட்சியர் அய்யப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது, வர்த்தக சங்கத் தலைவர் ராஜா, துணைத் தலைவர் வெங்கடேஷ் ராஜா, பேரூராட்சி நிர்வாக அதிகாரி கணேசன், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் கலந்துகொண்டனர். எட்டயபுரம் பஜாரில் உள்ள காய்கறி கடைகள், நாளை (17-ம் தேதி) முதல் பேருந்து நிலையத்தில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. கோவில்பட்டி மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT