Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி முதல் - முதற் கட்ட கரோனா நிவாரண தொகை வழங்கப்படும் : முறைகேடு இருந்தால் புகார் அளிக்கலாம்; ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப் படும் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மே மாதத்துக்கான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வரும் 15-ம் தேதி, முதற் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த டோக்கனில் நிவாரணத்தொகை பெறும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது சென்று கரோனா நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரத்தை பெற்றுக்கொள்ளலாம்.

மின்னணு குடும்ப அட்டைகள் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்படும். அதேநேரத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ‘epos Devise’ மூலம் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும். குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப் பட்டதும், அவர்களது கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் மே 15-ம் தேதி முதல் கரோனா நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். நியாய விலைக்கடைக்கு செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இதில், ஏதேனும் குறைபாடு அல்லது முறைகேடு இருந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி 04172-273166 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்’’. என தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x