Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், காவல் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், கடைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என்பது குறித்த கண்காணிப்பும் தொடர்கிறது.
இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 40 காவல்நிலையங்களில் 1800-க்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு காவல் நிலையங்களிலும், அந்தந்த பகுதிக்குட்பட்ட சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 1834 போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 90 சதவீதம் பேர், முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணையாக 15 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு சிலருக்கு காய்ச்சல் போன்ற சில பாதிப்புகள் இருப்பினும், அனைவரும் நலமாக உள்ளனர், என்றனர்.
ரயில்நிலையத்தில் கூட்டம்
இதனிடையே கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் கட்டிடப்பணி, ஜவுளித்துறை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். பிஹார், ஒடிசா, ராஜஸ்தான் போன்ற வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன், ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT