Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM
பொதுமக்கள் இரு வாரங்களுக்கு வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் ராமன் தலைமை வகித்து பேசியதாவது:
கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாத தனிநபர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். மாவட்டத்தில் தற்போது வரை முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.1.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க 2 வாரங்களுக்கு பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகேயுள்ள அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையை அணுகி உரிய பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி 2,641 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,218 பேருக்கு பரிசோதனை நடந்ததில், 175 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மலர்விழி வள்ளல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT