Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

கரோனா தடுப்பு வழிமுறைகளை கண்காணிக்க - சேலத்தில் 14 அணிகள் அமைத்து போலீஸார் ரோந்து :

சேலம்

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க போலீஸார் 14 அணிகளை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. பொதுஇடங்களில் நடமாடுபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு ரூ.200 வரை அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட நகராட்சிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீஸாரும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாநகரில் ரோந்து போலீஸார் 14 அணிகளாக நகரின் முக்கிய இடங்கள், சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, தலா ரூ.200 அபராதம் விதித்து, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இத்துடன், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 38 காவல் நிலையங்களிலும் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x