Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

சேலம் லீ பஜாரில் - களைகட்டிய மளிகைப் பொருட்கள் மொத்த விற்பனை : பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை

சேலம்

சேலம் செவ்வாய்ப்பேட்டை லீ-பஜாரில் மளிகைப் பொருட்கள் மொத்த விறபனை களைகட்டி யுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருவதால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சேலத்தில் கடந்த 1919-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியர் லீ என்பவரால் தொடங்கப்பட்து செவ்வாய்பேட்டை லீ பஜார் சந்தை.இங்கு வீட்டு சமையலுக்கு தேவை யான மளிகைப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.

ஆண்டு தோறும் மார்ச் மாதம் செவ்வாய்ப்பேட்டை லீ-பஜார் மற்றும் பால் மார்க்கெட்டுக்கு வந்து பொதுமக்கள் பலர் ஒரு ஆண்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கிச் செல்வது வழக்கம்.

கடந்த ஒரு வாரமாக செவ்வாய்ப்பேட்டை லீ-பஜார், பால் மார்க்கெட்டுக்கு கடலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் வந்து மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

செவ்வாய்ப்பேட்டை மார்க் கெட்டில் உளுந்தம் பருப்பு, துவரம்பருப்பு, புளி ஆகியவை கிலோ ரூ.100, சீரகம் ரூ.170 முதல் ரூ.210, வெந்தயம் ரூ.80 முதல் ரூ.100, கடுகு ரூ.80, மிளகாய் ரூ.175 முதல் ரூ.200, பூண்டு ரூ.60 முதல் ரூ.140 வரை விற்பனையாகி வருகிறது. தரத்துக்கு ஏற்ப விலையுள்ளது.

தற்போது சந்தை விற்பனை களைகட்டிய நிலையில், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

எனவே, செவ்வாய்ப்பேட்டை லீ-பஜார், சத்திரம் பால் மார்க்கெட் பகுதியில் கூடுதல் போக்குவரத்து போலீஸாரை நியமித்து, நெரிசலைதடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x