Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM
சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வரும் 25-ம் தேதி பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதையொட்டி, நேற்று முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருவிழா வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது. தினசரி காலை 6 மணி, மதியம் 12 மணி மற்றும் மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
வரும் 23-ம் தேதி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து சுவாமி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்து வருதலும், இரவு 7.30 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், சக்தி அழைப்பும் நடக்கிறது.
அம்மன் ஊர்வலம்
வரும் 25-ம் தேதி காலை 7.30 மணிக்கு திருக்கல்யாணத்தை முன்னிட்டு அம்மன் பெரிய கிணறு அருகே கங்கைகரை அடைந்து திருக்கல்யாண வைபோகம் மற்றும் கங்கனம் கட்டுதல் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் சின்னதிருப்பதி பெருமாள் கோயில் சென்று வர பக்தர்கள் நீராடி மஞ்சள் ஆடை அணிந்து ஊர்வலமாக வந்து அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பால் குட ஊர்வலம்
வரும் 26-ம் தேதி காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு பால் குட ஊர்வலமும், 108 லிட்டர் பால் அபிஷேகமும் நடக்கிறது. வரும் 27-ம் தேதி இரவு 8 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் சத்தாபரணம் நிகழ்ச்சியும், 28-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலாவும் நடக்கிறது. வரும் 29-ம் தேதி மாலை 5 மணிக்கு குத்து விளக்கு பூஜையும், வரும் 30-ம் தேதி கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியுடனும் விழா நிறைவு பெறுகிறது.கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திருவிழாவில் பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT