Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பது தொடர் பாக, மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ராமன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு 4 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, வடக்கு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஓமலூர் அடுத்த கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலும், ஏற்காடு (தனி), சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சேலம் அம்மாப்பேட்டை கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி) ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தலைவாசல் அடுத்த மணிவிழுந்தான் (தெற்கு) கிராமத்தில் உள்ள மாருதி கல்வி நிறுவன வளாகத்திலும், எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளுக்கு சங்ககிரி அருத்த வீராச்சிபாளையம் அம்மானி கிராமத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேவையான பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதி, அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT