Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய வழக்கில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கேரள மாநில, ‘தண்டர்போல்ட்’ கமாண்டோ போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில், சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கணவாய்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகமும் ஒருவர். இவரது உடல் கணவாய்புதூரில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின்போது, மணிவாசகத்துக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் சிலர் முழக்கங்களை எழுப்பினர். இதுதொடர்பான புகாரின்பேரில், தீவட்டிப்பட்டி போலீஸார், சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், 6 பேரை ஏற்கெனவே கைது செய்தனர்.
இந்நிலையில்,நேற்று காலை இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த தருமபுரி மாவட்டம், அரூர் சித்தானந்தம் (68) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT