Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

கொங்கணாபுரம் சந்தையில் ரூ.5.50 கோடி வர்த்தகம்

சேலம்

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று நடந்த சந்தையில் ரூ.5.50 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் வாரம்தோறும் சனிக் கிழமை கால்நடை சந்தை கூடி வருகிறது. நேற்று நடந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தைக்கு 6,200 ஆடுகள், 1,000 பந்தய சேவல்கள், 2,500 கோழி, சேவல்களை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும், 100 டன் காய்கறிகளும் விற்பனைக்கு வந்தன.

இதில், 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.5,500 முதல் ரூ.6,500 வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.11,000 முதல் ரூ.13,000 வரையும், குட்டி ஆடுகள் ரூ.1,800 முதல் ரூ.2,200 வரையும் விற்பனையானது. பந்தய சேவல்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.6,000 வரையும், வளர்ப்பு கோழிகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது.

இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறும்போது, “சந்தையில் காய்கறி, ஆடு, கோழி, பந்தய சேவல் உள்ளிட்டவையை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் நேற்று ரூ.5.50 கோடி வரை வர்த்தகம் நடந்தது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x