Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சேலம் ஆவின் பால் பண்ணைக்கு ஏ-பிளஸ் தரம் வழங்கி தரவரிசைப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆவின் பொது மேலாளர் நர்மதா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் ஆவின் பால் பண்ணையில். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தற்செயல் ஆய்வு கடந்த 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. ஆய்வின்போது, பண்ணையின் கட்டமைப்பு வசதி, பால் மற்றும் பால் உபபொருட்கள் கையாளப்படும் விதம், தரம், சுகாதாரம் பேணுதல், தயாரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களின் தனிப்பட்ட சுகாதாரம், பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் சேலம் ஆவின் பால் பண்ணை 110 மதிப்பெண்களுக்கு 103.8 மதிப்பெண் பெற்று, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால், ஏ-பிளஸ் தரம் வழங்கப்பட்டு முன்மாதிரி நிறுவனமாக தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT