Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சேலம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், ஆவடத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கச்சிப்பள்ளி முனியப்பன் கோயில் ஓடையின் அருகே நீர் செறிவூட்டும் கிணற்றுக்கு ஆட்சியர் ராமன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
நீர் செறிவூட்டும் கிணறானது 15 அடி நீளம், 6 அடி அகலம், 20 அடி ஆழம் கொண்டது. மழைநீர் செறிவூட்டும் கிணற்றில் வந்து சேர்வதால், இதை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
ஆவடத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தர்மகிணற்றுக்காடு ஓடை பகுதியில் ரூ.1.05 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுவரும் நீர் செறிவூட்டும் கிணற்றையும் ஆய்வு செய்தோம். மேலும், ரூ.17.68 லட்சம் மதிப்பில் சத்யா நகரில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலை, அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் பணி, ரூ.4.11 லட்சம் மதிப்பில் சவுரியூர் ஆண்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி., ரூ.5.13 லட்சம் மதிப்பில் சவுரியூர் பெண்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி, சூரப்பள்ளி ஊராட்சி பொங்கப்பாலி கரடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தோம்.
ஆய்வின்போது, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, கூடுதல் இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதி அரசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT