Published : 01 Feb 2021 03:13 AM
Last Updated : 01 Feb 2021 03:13 AM
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா இன்று(பிப்.1) தொடங்கி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா ஆண்டுதோறும் 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, 174-ம் ஆண்டு ஆராதனை விழா 2 நாட்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது.
இன்று(பிப்.1) மாலை 5 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு, மாநிலங்களவை உறுப்பினரும், தமாகா தலைவரும், தியாகபிரும்ம மஹோத்சவ சபைத் தலைவருமான ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார். ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான பிப்.2-ம் தேதி(நாளை) காலை 5.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாதஸ்வர இசை, 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனைகள் வைபவம் ஆகியவை நடைபெற உள்ளன. தொடர்ந்து, காலை 10 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இவ்விழாவில் பங்கேற்பவர்கள், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சபை நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த விழாவுக்காக வழக்கம்போல பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT