Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடர்பாக திமுக சார்பில் புகார்

பெரும்புதூர்:தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியை அனைத்துக் கட்சியினரும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பெரும்புதூர் தொகுதி, நந்தம்பாக்கம் ஊராட்சி வாக்காளர் பட்டியலில் பாகம் எண் - 109, தொடர் எண் 220-ல் வீரராகவன் என்ற வாக்காளர் பெயரும், அதற்கு நேராக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா புகைப்படமும் இடம் பெற்றிருப்பதை கண்டு திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் எறையூர் ஊராட்சியைச் சேர்ந்த திமுக நிலை முகவரான புருஷோதம்மன் பெயர், பாகம் எண் : 287, தொடர் எண் : 23 டெலிட் (DELETE) என்று அச்சிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன் கவனத்துக்கு திமுகவினர் கொண்டு சென்றனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகளிடம் அன்பரசன் புகார் செய்தார்.

இதுகுறித்து பெரும்புதூர் வட்டாட்சியர் நிர்மலா கூறும்போது, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் தொடர்பாக புகார் வந்ததையடுத்து அந்த மனுக்களை ஆய்வு செய்து வருகிறோம். தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x