Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM
எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கோனேரிப்பட்டியில் உள்ள விநாயகர், ஓம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். முன்னதாக முதல்வருக்கு கோயில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கிரிதரன் பட்டாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் தீர்த்தகுடத்தில் புனித நீர் எடுத்து சென்று கோயில் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
விழாவில், முதல்வர் மற்றும் முதல்வரின் மனைவி ராதா உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்று யாகசாலை பூஜை மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானத்திலும் பங்கேற்ற முதல்வர் குடும்பத்தினருடன் சாப்பிட்டார்.
பின்னர், சேலம் திரும்பிய முதல்வர் பழனிசாமி, உளுந்தூர்பேட்டையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் சேலம் வருகையை முன்னிட்டு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், டிஐஜி பிரதீப்குமார், எஸ்பி தீபாகாணிகர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT