Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM

டெல்டாவுக்கான நீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து, கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்துக்கான தேவைக்கு ஏற்ப, அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால், பாசனத்துக்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு 4-ம் தேதி முதல் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியில் இருந்து, விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்து, பாசனத்துக்கான நீர் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியில் இருந்து நேற்று காலை முதல் விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு, பாசனத்தேவை முடிவுற்றதால் கடந்த 16-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

இதனிடையே, மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று 105.95 அடியாகவும், நீர் இருப்பு 72.78 டிஎம்சி.,-யாக அணைக்கான நீர் வரத்து நேற்று முன்தினம் 1,206 கனஅடியாக இருந்த நிலையில், நீர் வரத்து சற்று அதிகரித்து நேற்று விநாடிக்கு 1,356 கனஅடியாக காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x