Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகளை கால்வாயில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
குப்பையில்லா மாநகரமாக சேலத்தை மாற்ற மாநகராட்சியின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நடைபயிற்சியின்போது குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி தன்னார்வலர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் கோரிமேடு என்ஜிஜிஓ காலனியில் சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் நிர்வாகிகள் சாலையோர குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடந்த இப்பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் 680 தன்னார்வலர்கள் பங்கேற்று 735 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றினர்.
இப்பணியின்போது, புலிகுத்தி பகுதியில் குப்பைகளை கால்வாயில் கொட்டிய சிற்றுண்டி கடை உரிமையாளருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
சேலம் குப்பையில்லாத மாநகரமாக திகழ அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை கழிவுகளை முறையாக மாநகர தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்காமல் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தெருக்களில் கொட்டும் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுத்து அபாரதம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
படவிளக்கம்:
சேலம் கொண்டலாம்பட்டி புலிக்குத்தி பகுதியில் தன்னார்வலர்களுடன் இணைந்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT