Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

கிராம வங்கிகளை பொதுத்துறை வங்கிகளூடன் இணைக்க எதிர்ப்பு

சேலம்

கிராம வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கக் கூடாது என அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிராம வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு சேலத்தில் நடந்தது. மாநாட்டுக்கு, அதிகாரிகள் சங்கத் தலைவர் பத்மநாபன், பொதுச் செயலாளர் அறிவுடைநம்பி, ஊழியர் சங்கத் தலைவர் சுரேஷ், அமைப்பு செயலாளர் பருதிராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.

அகில இந்திய கிராமவங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் ராஜூவன், பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரா ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பின்னர் பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் 686 மாவட்டங்களில் 43 கிராம வங்கிகள் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வருகிறது. இவை மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை வங்கிகளின் கீழ் இயங்கி வருகிறது. லாபம் ஈட்டும் வங்கிகளை ‘ஏ’ பிரிவிலும், சராசரியாக இயங்கும் வங்கிகள் ‘பி’ பிரிவிலும், நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை ‘சி’ பிரிவாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பிரித்துள்ளது.

இதில் ‘ஏ’ பிரிவு வங்கிகள் தொடர்ந்து இயங்கவும், ‘பி’ பிரிவு வங்கிகளுக்கு அதிக முதலீடு வழங்கவும், ‘சி’ பிரிவு வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதை நாங்கள் எதிர்கின்றோம்.

எனவே, கிராம வங்கிகளை இணைப்பு நடவடிக்கை மேற் கொண்டாலோ, தற்போதுள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல் அரசு தொடர்ந்து செயல்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x