Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

கட்டிடத் தொழிலாளர்களுடன் திமுக கலந்துரையாடல் தயாநிதி மாறன் எம்பி பங்கேற்பு

திமுக சார்பில், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது. இதில், எம்பி தயாநிதி மாறன், கட்டிடத் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசினார். அருகில் எம்பி பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட சேலம் மேற்கு, ஓமலூர் சட்டப்பேரவை தொகுதிகளில், திமுக சார்பில் நடைபெற்ற ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சியில் திமுக எம்பி தயாநிதிமாறன் பங்கேற்றார்.

சேலம் மெய்யனூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கட்டிடத் தொழிலாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் பங்கேற்று, தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கட்டுமானப் பொருட்கள் விலை ஏற்றம், மணல் தட்டுப்பாடு, ஜிஎஸ்டியால் வேலை இழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக தொழிலாளர்கள் தெரி வித்தனர். பின்னர் தயாநிதிமாறன் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியிட வேண்டும். கட்டுமானத் தொழிலில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் முதல்வர்களின் உறவினர்களே ஒப்பந்தம் எடுத்துச் செய்கிறார்கள்.

இரும்பாலை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்த மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எம்பி பார்த்திபன், அவைத்தலைவர் கலையமுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x