Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM

அடிப்படை வசதி செய்துதரக் கோரி மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை: மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அழகர் நகர் மதுரை மாநகராட்சியின் விரிவாக்க பகுதியாக உள்ளது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாநகராட்சியின் பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி செலுத்தியும் தற்போது வரை அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

இந்நிலையில், நேற்று அழகர் நகர் பகுதியினர் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நெடுங்குளம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் நடத்தியவர்களிடம் கீரைத்துரை போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இன்னும் ஒரு வாரத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x