Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

பேரையூர் இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பேரையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த சந்தோஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரைக் காதல் திருமணம் செய்தார். புனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சாப்டூர் சார்பு ஆய்வாளர் ஜெயகண்ணன் மற்றும் காவலர் ராஜா ஆகியோர் எங்கள் குடும்பத்தினரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்தனர்.

என் இளைய சகோதரர் ரமேஷை செப். 16-ல் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் அவர் வீடு திரும்பவில்லை. எங்கள் வீட்டிலிருந்து 300 அடி தொலைவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி ரமேஷ் உடல் காணப்பட்டது. போலீஸார் தாக்கியதில் எனது சகோதரர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக இரவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. எனவே, ரமேஷ் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது ரமேஷின் உடல் மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டு அதன்படி மறு பிரேதப் பரிசோதனை செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. ரமேஷ் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x