Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

விசாரணைக்கு சென்றவர் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்

மதுரை: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் அய்யனார் (30). இவர் நேற்று முன்தினம் இரவு டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் அருகே நண்பர்களுடன் மது அருந்தினார். பின்னர் அய்யனார் மட்டும் நொறுக்குத் தீனி வாங்க கடைக்குச் சென்றுவிட்டு வருவதற்குள் நண்பர்கள் மது குடித்து விட்டனர். இதனால் தகராறு ஏற்பட்டது,

அப்போது அங்கு வந்த போலீஸார் அய்யனாரை மட்டும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் அங்கு மயங்கி விழுந்தார். அவரது பெற்றோருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சந்தேக மரணம் என டி.கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், அய்யனாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மதுரை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை கொடுத்தனர். அதில், ‘‘அய்யனார் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து முறையாக விசாரிக்குமாறு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இதில் பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x