Published : 29 Nov 2020 03:13 AM
Last Updated : 29 Nov 2020 03:13 AM

கரோனா தடுப்பு விதிமீறுவோரை கண்காணிக்க வலியுறுத்தல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பொது இடங்களில் பலர் முகக் கவசம் அணியாமல் சுற்றுவதால், கரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதை உள்ளாட்சி நிர்வாகம் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் முகக் கவசம் அணியாமல் சுற்றுவதால், மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் மூலம் தொற்று நோய் தடுப்பு சட்டம் 1897 பிரிவு 2-ன் படி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறிய, முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த நடவடிக்கையை உள்ளாட்சி அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்.

இதனால், நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொதுமக்கள் மீறும் நிலையுள்ளது. எனவே, இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x