Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM
‘சேலம்-நாமக்கல் மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தில் மேற்கொள்ளும் பராமரிப்பு பணி காரணமாக இன்று (28-ம் தேதி ) முதல் வரும் 30-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது,’ என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் குணசேகரன் தெரிவித்துள்ளதாவது:
சேலம் - நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் ராசிபுரம், எடப்பாடி கூட்டு குடிநீர் திட்டத்தில் இன்று (28-ம் தேதி) முதல் வரும் 30-ம் தேதி வரை மூன்று தினங்களுக்கு மகுடஞ்சாவடியில் நீரேற்றுக்குழாய்களை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற் கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, ஆட்டையாம்பட்டி, மல்லூர் பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளிலும், மகுடஞ்சாவடி மற்றும் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடிநீர் நிறுத்தப்படும் மூன்று நாட்களுக்கு உள்ளூரில் உள்ள நீராதாரங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT