Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM

வங்கிகள் வட்டிக்கு மேல் வட்டி வசூலிப்பது நியாயமற்றது உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை

பெரம்பலூரைச் சேர்ந்த ஜெயராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள பெடரல் வங்கியில் விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ.50 லட்சம் நீண்டகாலக் கடன், ரூ.15 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினேன். இதில் வீட்டுக்கடனுக்காக ரூ.18 லட்சமும், நீண்ட காலக்கடனில் ரூ.25 லட்சமும் செலுத்திவிட்டேன்.

பின்னர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதனால், நான் அடமானம் வைத்த விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை வங்கி மேற்கொண்டது.

இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் ரூ.75 லட்சம் செலுத்த உத்தரவிடப்பட்டது. அதற்கான வரைவோலையை வங்கி மேலாளரிடம் அக். 7-ல் கொடுத்தேன். அவர் வரைவோலையை வீசி எறிந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது என் விவசாய நிலத்தை தனியாரிடம் விற்றுப் பணத்தை வசூலிக்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே, நீதிமன்ற உத்தரவை ஏற்கவும், விவசாய நிலத்தை தனியாரிடம் வழங்கத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வங்கிகள் கடனைத் திரும்ப வசூலிக்க சம்பந்தப்பட்டோருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அவர்கள் அளிக்கும் பதில் அடிப்படையில் முடிவுகள் எடுக்க வேண்டும். அதன் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணத்தைச் செலுத்த முடியாதோரிடம் வட்டிக்கு மேல் வட்டி வாங்குவது நியாயமற்றது.

எந்த அடிப்படையில் கடனைத் திரும்ப வசூலிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றனர். தனியார் நிறுவனங்கள் குண்டர்களை வைத்து கடன் தொகையை வசூலிக்கின்றனர். இதற்குக் கடன் வழங்காமலேயே இருக்கலாமே.

ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

சிறியளவில் கடன்கள் வாங்கிய ஏழைகளை, பணத்தை வசூலிக்கிறோம் என்ற போர்வையில் துன்புறுத்துகின்றனர் என்றனர்.

பின்னர், இந்த வழக்கில் வங்கி மேலாளர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வரைவோலையைத் தூக்கி எறிந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், வங்கி மேலாளர் காணொலிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிச.1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x