Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

மதுரை: மதுரையில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள், மாற்றுத் திறன் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மதுரை மாவட்டத்தில் 2019-20 கல்வி ஆண்டில் 817 பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இவர்கள் சிறப்புப் பயிற்சி மையங்கள் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

இதேபோல், 2020-21-ம் கல்வியாண்டிலும் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை வீடு வீடாகச் சென்று கண்டறியும் கணக்கெடுப்பு களப்பணி நவ.21-ம் தேதி முதல் டிச.10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் பள்ளி அளவில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேட்டிலிருந்து இடைநின்ற மாணவர்களின் விவரப் பட்டியல் சேகரிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக கள ஆய்வு செய்து, அந்த குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, இடம் பெயர்ந்து வந்த குழந்தைகள் உட்பட அனைத்து பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் குறித்து தெரியவந்தால், அது தொடர்பாக அருகில் உள்ள பள்ளிகள்/வட்டார வள மையங்கள்/வட்டார கல்வி அலுவலகங்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x