Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
தீபாவளியை முன்னிட்டு, சேலத்தில் குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்தை சீர் செய்யவும் 1,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே 7 மாதத்துக்கு பின்னர் பெங்களூருவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகை நாளை (14-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை உற்சாகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையை மீறி, மக்கள் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளில் குவிந்து, புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதனால், முக்கிய சாலைகள், கடை வீதிகளில் வாகன மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெரிசலை தவிர்க்க பழைய பேருந்து நிலையம் அம்மாப்பேட்டை சாலையில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மணல்மேடு, ஆனந்தா பாலம் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதேபோல, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் பேருந்துகள் 5 ரோடு வழியாக வருவதை தவிர்த்து குரங்குச் சாவடி மேம்பாலம் வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு வரவும், பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் 15 நிமிடங்களில் மீண்டும் புறப்பட்டுச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடை வீதிகளில் குற்றம் மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்க மாநகர காவல் துணை ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் 1,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமரா பெருத்தப்பட்டும், கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
200 சிறப்பு பேருந்துகள்
தீபாவளியை முன்னிட்டு சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், 7 மாதங்களுக்கு பின்னர் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT