Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி

திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற் சவம் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு உற்சவம் நவ.3-ம் தேதி தொடங்கி நடை பெற்றது. இந்த உற்சவத்தின்போது, உற்சவர் நம்பெருமாள் தினந்தோறும் மாலையில் மூலஸ் தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடி மரத்துக்கு அருகிலுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி, ஊஞ்சலில் ஆடியவாறே பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இவ்விழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் காலை 9.15 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்திரபுஷ்கரணிக்கு சயன பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், காலை 9.45 மணிக்கு சயன பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதை சந்திரபுஷ்கரணி குளக்கரையில் நின்று நம்பெருமாள் கண்டருளினார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைந்தார். அங்கு முற்பகல் 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளி, இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன், அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x