Published : 07 Nov 2020 03:15 AM
Last Updated : 07 Nov 2020 03:15 AM

திருச்சியில் 14 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சி எடமலைப்பட்டி புதூரை அடுத்த எம்ஜிஆர் நகரில் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை 2 பேர் மினி வேனில் ஏற்றுவதைக் கண்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் இருவரும் ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடையின் விற்பனையாளர் சுபத்ரா, எடையாளர் செந்தில் குமார் ஆகியோர் உதவியுடன் கடத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து, மினி வேன் மற்றும் அதில் இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 14 மூட்டை அரிசி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், ரேஷன் கடை விற்பனையாளர் சுபத்ரா, எடை யாளர் செந்தில் குமார், மினி வேனில் அரிசி மூட்டைகளை ஏற்றிய கருமண்டபத்தைச் சேர்ந்த தாமஸ் மகன் டோனி தாமஸ் (27), ராமையா மகன் ஆறுமுகம் (22) ஆகிய 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸார் எடமலைப்பட்டிபுதூர் வந்து 4 பேரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x