Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் - வாயு நிலை ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது : தினமும் 400 சிலிண்டர்கள் விநியோகம் செய்ய திட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் வாயு நிலையிலான ஆக்சிஜனை மருத்துவ பயன்பாட்டுக்கு அனுப்புவதற்காக சிலிண்டர்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ பயன் பாட்டுக்கான வாயு நிலையிலான ஆக் சிஜன் உற்பத்தி நேற்று தொடங்கியது. தினமும் 400 சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது அலகில் கடந்த மாதம் 12-ம் தேதி இரவு முதல் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. ஆனால், மறுநாள் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தொடர்ந்து 6 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கோளாறு சரி செய்யப்பட்டு மே 19-ம் தேதி மீண்டும் திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. முதலாவது அலகில் நேற்று வரை 442.90 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில், 417.38 டன் திரவ ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாயு நிலை ஆக்சிஜன்

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் வாயு நிலையிலான ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகிறது. ஆனால், அதை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் அங்கு இல்லாததால் கடந்த ஒரு மாதமாக உற்பத்தியான 3,955 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் வீணாக காற்றில் கலந்தது.

இந்நிலையில், வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து மருத்துவ பயன்பாட்டுக்கு விநியோகம் செய்வதற்காக ரூ.11 கோடி மதிப்பில் பாட்டிலிங் பிளான்ட் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இப்பணி வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்கும் பணி நேற்று தொடங்கியது.

இதுதொடர்பாக, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ரூ.11 கோடி செலவில் வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காற்றில் வீணாக கலக்கும் வாயு நிலையிலான ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து விநியோகம் செய்யும் தொழில்நுட்ப வசதியை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் தினமும் மருத்துவ பயன்பாட் டுக்கான 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை உற்பத்தி செய்ய முடியும். நாட்டின் தேவைக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்வோம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x