Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோகம் - ஆக்சிஜன் விநியோக குளறுபடியால் 13 பேர் உயிரிழப்பு : துணை ஆட்சியர் தலைமையில் விசாரணைமருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் உயி ரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மருத்துவமனை நிர் வாகத்தை கண்டித்து மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் 1,500-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செங் கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் 1,000-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஆக்சிஜன் வசதி யுள்ள 480 படுக்கைகளும் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கோளாறால் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர், நள்ளிரவில் அடுத் தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்த தாக குற்றம்சாட்டிய உறவினர்கள், அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள், செவி லியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவசர அவசர மாக ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு மருத் துவமனையில் உள்ள சிலிண்டர்களில் நிரப்பப்பட்டன.

இதுகுறித்து மருத்துவர் சுதாகர் கூறியதாவது:

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராள மானோர் இங்கு சிகிச்சை பெற்று வருகின் றனர். மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருந்தும் சிறப்பான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என இப்பிரிவின் பொறுப்பாளர்கள் மருத்துவ மனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித் தும், அதுபற்றி போதிய கவனம் செலுத்த வில்லை. ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறு வனங்கள் தனியார் மருத்துவமனை களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக் கின்றன. இதுபற்றி பலமுறை மருத்துவ மனை நிர்வாகத்துக்கு தெரிவித்தும் அவர் கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மருத்துவமனையில் போதிய மருத் துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணி யாளர்கள் இல்லை. ஏராளமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நோயாளிகள் இறந்தால், அவர்களின் உற வினர்கள் எங்களை தாக்குவதும், மோச மான வார்த்தைகளால் திட்டுவது தொடர்கிறது. எங்களுக்கு போதிய பாது காப்பு இல்லை. மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் உயிர் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் கூறும் போது, ‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை. 13 பேரும் பல் வேறு காரணங்களால் இறந்துள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர். மற்றவர்கள் வயது முதிர்வு, சர்க்கரை, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் இறந்துள்ளனர். மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இருப்பு உள்ளது.

ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணை யில் தெரிந்துள்ளது. இறப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்த துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளது’’ என்றார்.

செவிலியர்கள் குற்றச்சாட்டு

மருத்துவமனை செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

அரசு விதிப்படி இந்த மருத்துவமனை யில் 1,100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி செய்ய வேண்டும். ஆனால், 152 செவிலியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். 900 செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. கரோனா சிகிச்சைக்கு 500 செவிலியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 35 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். கரோனா காலத்தை கருத்தில் கொண்டு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத் தினோம். அரசு கண்டுகொள்ளவில்லை.

தற்போது மருத்துவமனையில் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ள னர். நேற்று முன்தினம் மாலை 4 மணி முதலே ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்ப தாக நிர்வாகத்துக்கு மருத்துவப் பணி யாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நிர் வாகத்தினர் முறையாக ஏற்பாடு செய்யா மல், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவை குறைந்து வழங்க அறிவுறுத்தி யுள்ளனர். அதன் அடிப்படையில் குறைத்து வழங்கப்பட்டது. ஒருகட்டத்தில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்துவிட்டதால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதை மறைத்து, ‘ஆக்சிஜன் விநியோகத் தில் ஏற்பட்ட குளறுபடியே உயிரிழப்புக்கு காரணம்’ என பொய்யான தகவலை தெரி வித்துள்ளனர். இதை செவிலியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மருத்துவர் கள், செவிலியர்கள், மருத்துவப் பணி யாளர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகின்றனர். தங்கும் வசதி, உணவுக்கு நிர்வாகம் ஏற்பாடு செய் யாததால் பலர் பணி செய்ய தயங்கு கின்றனர் அரசு இந்த விவகாரத்தில் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறும்போது, ‘‘கரோனா தொற்று ஏற்பட்ட தால் எங்கள் உறவினர்களை இங்கு சேர்த்தோம். ஆனால், ‘இறந்தவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை’ என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கின் றனர். ஆனால், எங்களிடம் உடலை ஒப் படைக்காமல் அவர்களே எடுத்துச் சென்று மயானத்தில் எரித்து விட்டனர். நாங்கள் உடலை கேட்டோம். ஆனால் அதிகாரிகள், ‘தொற்றால் இறந்த உடலை தர முடியாது’ என கூறிவிட்டனர்” என்றனர்.

மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவமனையில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பணியாற்றும் மருத் துவர்கள், செவிலியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மருத்துவர்கள், செவி லியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ எனக் கோரி அவர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஒரு வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என்று உறுதி அளித்தார். இதை யடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

மருத்துவக் கல்வி இயக்குநர் மறுப்பு

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது:

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 1,350 படுக்கைகள் உள்ளன. இதில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்காக 650 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் 23 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் முழு கொள்ளளவுடன் உள்ளது. தற்போது ஆக்சிஜன் தேவைக்காக ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். இங்கு தினமும் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதைக் காட்டிலும் கூடுதலாகவே மருத்துவமனையில் இருப்பு உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவுதான் இருந்தது. தற்போது 23 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் நிரப்பும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய ஆக்சிஜன் வசதி உள்ளது. பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்பிரச்சினையை ஓரிரு வாரங்களில் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x