Published : 30 Jun 2014 11:41 AM
Last Updated : 30 Jun 2014 11:41 AM

28 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை அரசின் பிடியில் உள்ள 28 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெய லலிதா ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜூன் 19-ந் தேதி நான் எழுதிய கடிதத்தின் மீது விரைந்து நட வடிக்கை எடுத்ததற்காக தங் களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற் கொண்டதன் காரணமாக, கடந்த 18-ம் தேதி இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 46 மீனவர்கள் விடு விக்கப்பட்டனர்.

அதேபோல், ஜூன் 24-ம் தேதி எழுதிய கடிதத்தின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால், ஜூன் 19-ம் தேதி இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 7 மீனவர்கள், ஒரு இயந்திர படகுடன் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜூன் 23-ம் தேதி இலங்கை அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்ட மேலும் 11 மீனவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அது மட்டு மல்லாமல், ஏற்கெனவே விடுவிக் கப்பட்ட மீனவர்களின் மீன்பிடி படகுகளும்இன்னும் திரும்பிக் கொடுக்கப்படவில்லை இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமேசு வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்ட இன்னொரு சம்பவத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டுவரக்கூடிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். கடந்த ஜூன் 28-ம் தேதி அன்று அதிகாலை ராமேசுவரம் கடல் பகுதியில் 3 இயந்திர படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 17 மீனவர்கள் இலங்கை கடற்படை யினரால் பிடித்துச்செல்லப்பட்டு தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்படும் சம்பவங் களும், கடத்திச் செல்லப் படும் நிகழ்வுகளும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடலில் ஆபத்தான சூழலில் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் காலங் காலமாக மீன் பிடித்துவரும் பாக்ஜல சந்தி பகுதியில்தான் மீன்பிடித்து வருவதை தாங்கள் அறிவீர்கள். கச்சத்தீவை சொந்தம் கொண்டாட இலங்கைக்கு உரிமை உண்டா என்பதில் கேள்வி எழுந்துள்ள நிலையில், இலங்கையின் சர்வதேச கடல் எல்லைக்கோடாக அந்த பகுதியை இந்தியா கருதக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். 1974, 1976-ம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக ஒப்பந்தங்கள் போடப்பட்டு இலங்கைக்கு கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்ட விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனவே, நமது மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்திற்கு இலங்கை கடற்படையின் விரோத மான செயல்களால் இடையூறு ஏற்படக்கூடாது என்பது மிகவும் முக்கியம். பாக்ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் பிடித்துச்செல்லப்படாமலும், கடத்திச்செல்லப்படாமலும் இருக்கும் வகையில், இலங்கை அரசின் உயர்நிலை அதிகாரத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டுசென்று விரைவாகவும் உறுதியாகவும் நடவடிக்கை எடுக்குமாறு எனது தலைமையிலான அரசு எதிர் பார்க்கிறது.

ஏற்கெனவே இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ள 11 மீனவர்கள் உள்பட 28 இந்திய மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடி யாக விடுவிக்க தூதரக அளவில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x