Published : 17 Oct 2022 04:45 AM
Last Updated : 17 Oct 2022 04:45 AM

காரைக்குடி அருகே அரபி பாட சாலை திறப்பு: பாஜகவினர் வாக்குவாதம்

அரியக்குடியில் அரபி பாடசாலை திறப்பு விழாவில், பள்ளிவாசல் திறக்க முயற்சி நடப்பதாக கூறி போராட்டம் நடத்த திரண்ட பாஜகவினர்.

காரைக்குடி

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்குடி அருகே அரியக்குடியில் அரபி பாடசாலை திறக்கப்பட்டது. ஆனால், பள்ளிவாசல் திறக்க முயற்சி நடப்பதாகக் கூறி பாஜகவினர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

தென்திருப்பதி என்றுஅழைக்கப்படும் அரியக்குடியில் பிரசித்தி பெற்ற திருவேங்கடமுடையான் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான வீடு அருகே பள்ளிவாசல் திறக்கப் போவதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்.5-ம் தேதி பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், முஸ்லிம்கள் அரபி பாடசாலைதான் திறக்கப் போவதாகத் தெரிவித்தனர். எனினும், உரிய அனுமதி பெற்று திறந்துகொள்ளுமாறு வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தெரிவித்தார். இதனை முஸ்லிம்கள் ஏற்று திறப்பு விழாவை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் லிம்ரா டிரஸ்ட் சார்பில், அரபி பாடசாலை திறக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், சில கட்டுப்பாடுகளுடன் அரபி பாட சாலையைத் திறக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அரபி பாடசாலை திறக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த பாஜகவினர், கோயில், வீடு அருகே பள்ளி வாசலை திறக்க முயற்சிப்பதாகக் கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி அரபி பாடசாலைதான் திறக்கப்படுகிறது என்று போலீஸார் கூறியதை அடுத்து பாஜகவினர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x