Published : 02 Oct 2022 04:35 AM
Last Updated : 02 Oct 2022 04:35 AM

வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பயிர்களில் 33% மேல் பாதிப்பு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க அழைப்பு

கோவை

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 33 சதவீதத்துக்கும் மேல் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கலாம் என விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். கோவை மாவட்டத்தில் சராசரியாக 240 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்யும்.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கியதை தொடர்ந்து, பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண்மைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஷபி அகமது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கனமழை பெய்யும் பட்சத்தில் வேளாண் பயிர்கள் சேதமடைவதை தவிர்க்க கீழ்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் பின்பற்றலாம்.

அதாவது, வயலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டும். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மேல் உரமாக தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும்.

தழைச்சத்து, நுண்ணூட்டச் சத்து குறைபாடு காணப்பட்டால் இலைவழி ஊட்டம் அளிக்கலாம். பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கத்தை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மழைநீர் சூழ்ந்துள்ள நெற்பயிர் வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

நீரில் மூழ்கிய பயிரில் ஏற்பட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஓர் இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மழையால் 33 சதவீதத்துக்கும் மேல் பயிர்களில் பாதிப்பு இருந்தால், மாவட்ட பேரிடர் மேலாண்மையின் கட்டணமில்லா எண் 1077, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக எண் 0422-2432739 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் தகவல் தெரிவிக்கலாம்.

அதேபோல, வட்டார அளவில் ஆனைமலை - விவேகானந்தன் (86374 71909), அன்னூர்- பாமாமணி (94427 44942), காரமடை - பாக்கியலட்சுமி (99408 71830), கிணத்துக்கடவு- அனந்தகுமார் (98430 65723), மதுக்கரை - ரத்தினம் (94433 25144), பெரியநாயக்கன் பாளையம் - கோமதி (99769 67571), எஸ்.எஸ்.குளம் - வெங்கடேசன் (96559 12226),

பொள்ளாச்சி வடக்கு- ஷீலா பூசலெட்சுமி (70106 65166), பொள்ளாச்சி தெற்கு - நாகபசுபதி (94424 47948), சூலூர் - விஜயகல்பனா (99940 74373), சுல்தான்பேட்டை - குருசாமி (99429 43169), தொண்டாமுத்தூர் - ஷீலா பூசலெட்சுமி (70106 65166) ஆகியோரை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x