Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM
கூரை கட்டிடத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருவது தெரியவந்தால், அந்தக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் கே.பாலு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘சென்னை அண்ணாநகர் சிந்தாமணி அருகே புது ஆவடி சாலையில் 450-ம் எண் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது.
டாஸ்மாக் நிறுவன விதிமுறைகளின் படி மதுபானக் கடைகள், கான்கிரீட் கட்டிடத்தில்தான் செயல்பட வேண்டும். ஆனால் சிந்தாமணி அருகேயுள்ள கடை, கூரை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு வரும் அந்தக் கடையை அங்கிருந்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீது தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு விசாரணை நடத்தியது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எத்திராஜூலு, ‘‘மனுதாரரின் வீட்டின் அருகே செயல்படும் இந்த மதுபானக் கடையால் அவர்களது குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஏராளமான தொந் தரவுகள் ஏற்படுகின்றன. கூரை கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட அனுமதி அளித்தது விதிமுறை மீறல் ஆகும். ஆகவே, அந்தக் கடையை அகற்ற வேண்டும்’’ என்று வாதிட்டார்.
டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.முத்து ராஜ், அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர், ‘‘450-ம் எண் மதுபானக் கடை விதிமுறைகளுக்கு உட்பட்டே இயங்கி வருகிறது’’ என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அண்மையில் தீர்ப்பளித்தனர். சம்பந்தப்பட்ட கடை அமைந்துள்ள இடத்தை டாஸ்மாக் நிறுவனத்தின் சென்னை மாவட்ட மேலாளர் நேரில் சென்று ஆய்வு செய்யுமாறும் கூரை கட்டிடத்தில் கடை இயங்கி வருவது தெரிந்தால், உடனடியாக அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT