Published : 01 Jun 2014 11:50 AM
Last Updated : 01 Jun 2014 11:50 AM

தடைக்காலம் நீங்கியதால் மீன்கள் வரத்து அதிகரிப்பு: மீன்களின் விலை குறைய வாய்ப்பு

மீன்பிடி தடைக்காலம் நீங்கியதையடுத்து, மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் மீன்களின் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்வளத்தை பெருக்குவதற்காக, விசைப் படகுகளில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. இந்தத் தடை கடந்த வியாழக்கிழமை முடிந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை நள்ளிரவு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்களில் சிலர் சனிக்கிழமை கரை திரும்பினர். இதையடுத்து, மீன்வரத்து அதிகரித்துள்ளது. இது குறித்து, காசிமேட்டை சேர்ந்த மீனவர் மகேந்திரன் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் நீங்கியதை யடுத்து, மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில், சில மீனவர்கள் சனிக்கிழமை கரை திரும்பினர். சிலர் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புகின்றனர். மேலும், சிலர் பத்து நாட்களுக்குள் கரை திரும்புவர்.

இதன் காரணமாக, மீன் வரத்து அதிகரித்துள்ளது. மீன்பிடித் தடைக் காலத்தில் வஞ்சிரம் மீன் கிலோ ஒன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது. அவற்றின் விலை இனி ரூ.400 முதல் ரூ.500 வரை குறையும். இதேபோல், மத்தி மீன் கிலோ ரூ.100 வரை விற்பனையானது. அவற்றின் விலை இனி ரூ.60 வரை குறையும்.

இதேபோல், கிலோ ஒன்றுக்கு ரூ.500 வரை விற்ற இறால் மீன், இனி ரூ.250 வரை குறையக் கூடும். மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.600 வரை விலை உயர்ந்த வவ்வால் மீன்கள் இனிமேல் ரூ.400 முதல் ரூ.500க்கு கிடைக்கும். இதேபோல், மற்ற மீன்களின் விலையும் படிப்படியாக குறையும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x