Last Updated : 18 Aug, 2022 04:35 AM

 

Published : 18 Aug 2022 04:35 AM
Last Updated : 18 Aug 2022 04:35 AM

புதர் மண்டிய ஆதிதிராவிடர் குடியிருப்பு: சிவகங்கை அருகே சுடுகாட்டு தொட்டி தண்ணீரை குடிக்கும் அவலம்

சிவகங்கை

சிவகங்கை அருகே ஆதிதிராவிடர் குடியிருப்பு முழுவதும் புதர் மண்டிய நிலையில் உள்ளது. மேலும் 4 ஆண்டுகளாக குடிக்கவும், குளிக்கவும் மயானத்தில் உள்ள தொட்டி தண்ணீரையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சிவகங்கை அருகே கிளாதரி ஆதிதிராவிடர் குடியிருப்பில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பல ஆண்டுளாக எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை.

சாலை முழுவதும் சேதமடைந்து புதர் மண்டி காணப்படுகிறது. தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் 4 ஆண்டுகளாக தெருக்குழாய்களில் தண்ணீர் வராததால், அப்பகுதி மக்கள் அருகேயுள்ள மயானத்தில் உள்ள தொட்டி நீரையே குடிநீராக பயன்படுத்துகின்றனர்.

குடிநீருக்காக தோண்டப்பட்ட சமுதாயக் கிணறு குப்பை கொட்டும் இடமாக உள்ளது.

இந்த ஊருக்கு சிவகங்கையில் இருந்து சென்று வந்த அரசு பேருந்து சில மாதங்களாக இயங்கவில்லை.

இதுகுறித்து வார்டு உறுப்பினர் அழகு மீனாபாண்டி மற்றும் சங்கு பாண்டி கூறியதாவது: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தும், எங்கள் பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் மயானத்தில் உள்ள தொட்டி தண்ணீரையே பயன்படுத்துகிறோம். அதுவும் 2 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வரும். மயானத்துக்கு செல்லும் பாதையும் மோசமாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள தெருச்சாலைகள் முழுமையாக சேதமடைந்து விட்டன.

குடியிருப்பு முழுவதும் புதர் மண்டி காணப்படுவதாலும், தெருவிளக்குகள் எரியாததாலும் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் நடமாடுகின்றன. அடிக்கடி மின்தடையும் ஏற்படுவதால் குழந் தைகள் படிக்க முடியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x