Published : 07 Mar 2022 07:22 AM
Last Updated : 07 Mar 2022 07:22 AM

உக்ரைனில் இருந்து 771 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர்: வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை: உக்ரைனில் இருந்து இதுவரை 771 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 181 மாணவர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உக்ரைனில் இருந்து இதுவரை 771 மாணவர்கள் தமிழகம் வந்துள்ளனர். அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்து, வீடு செல்லும் வரை தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டுச் சென்று படிக்கும் மாணவர்கள், இந்தியாவில் பயில வேண்டும் என்ற அக்கறை தமிழகமுதல்வருக்கு உள்ளது. மாணவர்களை அழைத்துவரும் நடவடிக்கைக்காக ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

உக்ரைனில் 5,000-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் 2,221 தமிழக மாணவர்கள்தான் இதுவரை பதிவு செய்துள்ளனர். கடைசி மாணவரைமீட்கும்வரை தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தெரிவித்து, மீட்புப்பணியில் தனிக் குழு ஈடுபடும்” என்றார்.

உக்ரைனில் இருந்து திரும்பி வந்த மாணவர் கூறும்போது, “அரசுக் கல்லூரியில் மருத்துவம் பயில இடம் கிடைக்காததால்தான் உக்ரைன் சென்றேன். எங்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. கார்கிவ் பகுதியில் உணவு,குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டோம். கல்லூரி விடுதிகளில் இருந்தவர்களுக்கு உணவு கிடைத்தது. குண்டுகள் அதிகமாக வீசப்பட்டன. பாதாளத்தில் 5 நாட்கள் பதுங்கி இருந்தோம்” என்றார்.

டெல்லியில் தமிழக குழு முகாம்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உக்ரைனில் சிக்கியுள்ள தமிழகமாணவர்களை மீட்க எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையிலான அந்தக் குழு டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து, தமிழகமாணவர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

இந்த சந்திப்பின்போது, குழு உறுப்பினர்கள் கலாநிதி வீரசாமி, எம்.எம்.அப்துல்லா, தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உடனிருந்தனர்.

டெல்லியில் தங்கியுள்ள இக்குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினர். உக்ரைனில் இருந்துவரும் மாணவர்களை தமிழகத்துக்கு தனி விமானம் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,டெல்லி வரும் மாணவர்களை தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x